
கடந்த சில நாட்களாக நிலவி வந்த வரட்சியான வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26 ஜனவரி 2026) விடுத்துள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மழை வீழ்ச்சி விபரங்கள்:
- வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
- நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
- குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் பனிமூட்டம்:
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
மின்னல் பாதுகாப்பு அறிவுறுத்தல்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திறந்த வெளிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.