ஒரு வானவில் போலே - 05
தொடர் கதை பாகம் 05

“மச்சான் Hitler வீட்டில வேலைங்க இருக்காம்” என ஒருவன் கூற “டேய் மச்சான்! சொந்த வீட்டிலயே சோலிக்கு பிந்தி பந்திக்கு முந்துற நாங்க இப்ப மட்டும் புதுசா என்னடா கல்யாண வீட்டுல வேலை! time க்கு போய் வட பாயாசத்தோட ஒரு பிடி பிடிக்கிறது மட்டும்தான் நம்மோட வேலை… சும்மா பொத்திகிட்டு இருப்பியா” என இன்னொருவன் பதில் சொன்னான். “அத விடு Gold fish, Red Morris, Black Morris, Calico, tiger balm…. என ஒட்டு மொத்த மீனுங்களும் இப்போ அந்த குளத்தில தான் நீந்திக்கிட்டிருக்கு….. ஆடைக்கும் கோடைக்கும் தான் இப்படி அம்சமா chance கிடைக்கும்!” என இன்னொருவன் சிலேடையாக சொல்ல…. “ஆமாடா Hitler வீட்டுக்கு ஒரு பொம்பிள சுறாவும் வந்திருக்காம்!” என கூற…. நண்பர் கூட்டம் வயிற்றை பிடித்தவாறு சிரித்தது. ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை. அதிலும் குறிப்பாக அவர்கள் சுறா என குறிப்பிட்டது அஜந்தாவை என்பதால் ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக இருந்திச்சு! “இல்ல போதும் மச்சான்…. ஏதாவது help பண்றன்னா பண்ணுவோம் இல்லைன்னா சும்மா இருப்போம்” என நான் கூறியதும் “சரி போய் help பு help பா பண்ணுவோம்” என ஒருவன் ஆமோதிக்க ஒரு Group ஆவே போனோம்.
எனது target ஒரு தடவை அஜந்தாவை பார்த்துவிட வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் அங்கிருந்த பரபரப்பு மற்றும் சோலிகள் மத்தியில் அது சாத்தியமில்லை; என பட்டது. அப்போது அங்கிருந்த ஒருவர் “டேய் கதிர் நீ நல்லா மரமேருவாய் தானே பின்னால கொப்பு வெட்ட வேண்டி கிடக்கு வா” என எனது அனுமதியை கேட்காமலேயே என்னை அழைத்து சென்றார். எத்தனை தடவை திருட்டு தனமாக மரம் ஏறி மாங்காய், கொய்யா, ஜம்பு என அந்த தோட்டத்தில் பறித்திருப்பேன்….. முதல் தடவையா Hitler அருகில் இருக்க அங்கே மரமேற போவதை நினைத்து கொஞ்சம் சிரிப்பு வந்தது. அதுவும் ” கவனமடா பார்த்து ஏறு” என Hitler கூறியது நமது area அதிசயம்! மரத்தில் ஏறும்போது நண்பன் ஒருவன் அருகில் வந்து ” மொத்த கூட்டமும் இங்கதான் பார்த்துகிட்டு இருக்காங்க! அந்த ஜன்னல பாரு” என்றதும் அவன் காட்டிய திசையில் பார்த்தேன்….. ஏதோ வித்தை பார்ப்பது போல் சிறுசு பெருசு என ஒரு பெண்கள் கூட்டம் தெரிந்தது. ஏன் எனப் புரியவில்லை!
“தம்பி கொப்புகள வெட்ட முன்னாடி அந்த முத்தினதுகள கொஞ்சம் கவனமா பிச்சு போடு பிள்ளைங்க பார்த்துட்டு இருக்காங்க” என Hitler சொன்னதும் தான் அந்த மொத்த கூட்டமும் கொய்யாபழத்துக்கும் மாங்காய்க்கும் வாய்பார்த்து நிற்பது புரிந்தது. மரத்தில் ஏறி முதலில் அவர் சொன்னது போலவே முத்தியிருந்த காய்களை பறித்து நண்பர்களிடம் போட்டேன். அவர்களும் பின்னால் வயசு பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் back up ல் catch எடுத்து Hitler ன் காலடியில் சமர்ப்பித்தனர். அதன் பின் அந்த கூட்டம் வந்து அதை எடுத்துச் செல்ல எனது கண்கள் அதில் அஜந்தா சிக்குவாள் என்ற நம்பிக்கையோடு பார்த்தும் ஊகும்… எந்த பலனுமில்லை. அப்போது திருமண வீட்டில் போட்ட பாட்டு என்னையறியாமல் சிரிப்பை ஏற்படுத்தியது….. ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே….’ என்ற S.P.B யின் தேன் குரலை ரசிக்கும் ஆற்றல் எனக்கு வந்திருந்தது! ‘காதலித்து பார்!” என்ற வைரமுத்துவின் கவிதை புத்தகத்தை திறக்கும் ஆற்றலை பெற்றிருந்தேன்! ஆனால் ஏனோ நான் தேடும் கண்பார்வை மட்டும் தவித்துக் கொண்டிருந்தது!!!!
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்