நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் பலத்த மழை
இன்றைய தினம் (06 பெப்ரவரி 2026) நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
காற்று மற்றும் பனிமூட்டமான நிலை:
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.