ஒரு வானவில் போலே - 32
தொடர்கதை பாகம் 32
என்றாவது ஒரு நாள் நான் அஜந்தாவை சந்திப்பேன் என்ற நம்பிக்கை அந்த கவிதையை பார்த்தபின்பு முற்றாக உடைந்தது…. யதார்த்தம் நாம் விரும்பாததை ஏற்றுக்கொள்ள வைக்கும்; விரும்பியதை அனுபவிக்க விடாமல் செய்யும்!….. அது ஒரு புதிர்! அந்த புதிரோடுதான் எமது உணர்வுகளும் தேடல்களும் மோதிக் கொண்டிருக்கிறது! ஒரு சில நேரம் கயல்விழியை காணாமல் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்திருந்தால் எனது வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போனதாக கூட இன்றைய தினம் நான் முடிவு செய்திருக்கலாம்! ஆனால் சில இழப்புகள் தவிர்க்க முடியாத நன்மைகளை காலத்திடம் விட்டு செல்கிறது! அப்படியானவள் தான் என் மகள் கயல்விழி…. அவள் என்னிடம் அவளது பாதிப்பை பற்றி பேசியது அவளின் மனதின் வார்த்தைகள் அல்ல. என் மனதை அதன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த போட்டுள்ள ஒரு வகை வேலி! என்பது புரிஞ்சிச்சு. அதாவது அவளுக்கும் நடந்தவை எல்லாம் தெரியும் ஆனால் படிப்படியாக இயற்கையின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள கற்றுத் தந்திருக்கிறாள்! இப்படித்தான் புரிந்து கொண்டேன்.
கதவு தட்டப்படும் சத்தத்துக்கு கண்களை துடைத்துக் கொண்டு சென்று கதவை திறந்தேன். அங்கு கயல்விழி தேனீர் தட்டுடன் நின்றாள். உள்ளே நுளைந்தபடி
“இட வசதிகள் எப்படி இருக்கிறது?”
என்று கேட்கவும் நான் மௌனமாக அவளது முகத்தை பார்த்தேன். ஒரு சில வினாடிகள் அவளும் மௌனமாகவே இருந்தாள். பின்னர்….
“Sorry அப்பா… இப்போ சிலதை புரிஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அந்த இருபத்திரெண்டு வருடத்துக்கு முந்திய மனோ நிலையை தாண்டி நீங்க வரணும்னு தான் கொஞ்சம் mind divert பண்ணினேன். மற்றபடி கயல்விழி கதிர் செல்வன் எங்கிறதில நிறைய சந்தோசம். சின்ன ஆட்சேபனை கூட இல்லை….சரி இன்னும் கொஞ்ச நேரத்தில தர்சன் Uncle வந்திடுவார். இந்த tea யை குடிச்சிட்டு தயாராகி வாங்க….. அடுத்தது நான் முதன் முதலா அப்பாக்காக போட்டது… கட்டாயமா உங்க Comment வரணும்”
என்றவளிடம். நான்…..
“சரிம்மா எப்படி எனக்கும் அஜந்தாக்கும் இடையில நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிருக்கே?”
என்றேன். அதற்கு அவள்….
“உங்க தூய காவியத்துக்கு ஆதாரம் முக்கியம்னு தான் என்னவோ அம்மா எல்லாத்தையும் diaries ல inch by inch பதிஞ்சு வெச்சிருக்கிறா. அதை தர்சன் Uncle எனக்கு Sexual attraction வரும் காலப்பகுதியில இதை படின்னு அம்மாவோட வேண்டுதல்படி தந்திட்டாரு…. அதுதான் எனக்கு வேத புத்தகம் போல மாறிட்டே!” என சிரித்தாள்.
அவள் ஊற்றிய tea யை உதட்டில் வைத்து உறிஞ்சினேன். எல்லாம் சரியாக இருந்திச்சு. ஆனால் இனிப்பு மட்டும் குறைவாக இருந்திச்சு. எனக்கு இனிப்பு கொஞ்சம் தூக்கலாக வேண்டும்…..
“ம்ம்ம் நல்லாயிருக்கு ஆனா…..”
எனும் போதே அவள்…..
“அப்பா இது கூட ஒரு வகையில நான் படிச்ச காதல் வேதத்தோட கட்டளை தான்….. உங்க ஆரோக்கியம் முக்கியம்….. அம்மா உங்களுக்கு இனிப்பு பிடிக்கும் ஆனா தான் limit பண்ணதா சொல்லியிருந்தாங்க. ஆனா அப்பா உங்க காதல் கதையை பார்த்துட்டு சம்பிரதாயப்படி கல்யாணம் ஆகுற வரைக்கும் காதலிக்க கூடாதின்னும் முடிவுக்கு வந்தேன்!”
என்றவாறு சிரித்தாள். கசப்பாயிருந்தாலும் ஒருவகையில் உண்மைகள் தான்….ம்ம்ம் இந்த மகளதிகாரம் கூட பிடித்திருந்திச்சு! புதிதாகவும் இருந்திச்சு! யதார்த்தத்தின் இன்னொரு கட்டத்தால் ஈர்க்கப்பட்டிருந்தேன்! சிறிது நேரத்தில் தயாராகி வெளியில் வந்தேன். Portico வில் Car கள் இரண்டு ஒன்றன் பின் ஒன்றாக வந்து நிறுத்தப்பட்டது. ஆர்வத்துடன் தர்சனை எதிர்பார்த்து பார்வையை படரவிட்டேன்.
தொடரும்….
எம்.யூ.அப்துல் ரஹீம்