அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிரடி விளக்கம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வெளியிடப்பட்ட தரம் 06 ஆங்கிலப் பாடத் தொகுதியில் (Module), ஆபாச இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து தேசிய கல்வி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
📝விசாரணையில் கண்டறியப்பட்ட தவறு:
இது குறித்து ‘360’ நடப்பு விவகார நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஒரு பாடப்புத்தகத்தை அச்சிடுவதற்கு முன்னர் சுமார் 12 தடவைகள் சோதிக்கப்படும் என்றும், பல நிலைகளில் ஒப்புநோக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இவ்வளவு முறைமைகள் இருந்தும் இந்தத் தவறு நடந்திருப்பது தர்க்கரீதியாகச் சதித்திட்டமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், விசாரணை அறிக்கையின்படி, முழுமையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தமே இந்தச் சிக்கலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அந்த இறுதி நேரத் திருத்தம் முறையான சோதனைக் கட்டங்களுக்கு உட்படுத்தப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
📝அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை:
இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில்:
தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) இரண்டு பெண் அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
📝அரசியல் தலையீடு குறித்த பதில்:
குறிப்பிட்ட அதிகாரிகளின் தகைமைகள் மற்றும் அவர்களின் அரசியல் பின்னணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் அரசாங்கம் எவ்வித தலையீடும் செய்யாது என்று உறுதியளித்தார். தகைமை குறைந்தவர்கள் பணியில் இருக்கும்போது இவ்வாறான தவறுகள் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
📝எதிர்க்கட்சித் தலைவருக்குச் சவால்:
இந்தத் தொகுதியில் அந்த குறிப்பிட்ட இணையத்தள இணைப்பு (Link) தவிர்ந்து, பிள்ளைகளை ஆபாசத்திற்கு ஈர்க்கும் வகையிலான வேறு எந்த உள்ளடக்கங்களும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இது குறித்து நிரூபிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்குச் சவால் விடுத்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க இச்சம்பவம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார்.